கொரொனா பெருந்தொற்று காரணமாக உலகமே வீட்டினுள் முடங்கி கிடக்கும் இச்சூழ்நிலையில் கல்வி நிலையங்கள் உட்பட பல துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம் எனச் சென்று கல்வி கற்ற சமுதாயம் இன்று வீட்டிலேயே மடிக்கணினி, கைத்தொலைபேசி முன்னால் அமர்ந்து பாடங்களைக் கற்கும் காட்சியையே நம்மால் வெகுவாகக் காண முடிகிறது.

கல்வியை ஒரு வியாபாரமாக செய்து வந்த பல கல்வி நிறுவனங்கள் இன்று திவாலாகி உள்ளன. உலகிலேயே பணக்கார பல்கலைக்கழகம் எனக் கருதப்பட்ட ‘ஹார்வர்ட்’ பல்கலைக்கழகம் கூட இன்று மூடிய கதவுகளின் பின்னால் ஒலிந்து கொண்டது. கல்விக்குப் பணம் ஒரு தடையில்லை என்பதை கொரொனா உணர்த்தியுள்ளது. கல்வியை எங்கிருந்தும் கற்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கற்கலாம் என்பதை நம்மால் இப்போது உணர முடிகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக இனி அதிக பணம் செலுத்த தேவையில்லை. மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்ல தேவையில்லை.

ஒவ்வொரு முறையும் இடர்பாடுகள் நேரும் பொழுது மனிதன் ஒரு கண்டுபிடிப்பை உருவாக்குகிறான். முதலாம் உலகப்போருக்குப் பின் மனிதன் இணையத்தை உருவாக்கினான். இரண்டாம் உலகப்போருக்குப் பின் மனிதன் நிலவில் காலடி பதித்தான். தற்போது மூன்றாம் உலகப்போர் எனக் கருதப்படும் இந்த கோவிட்-19 பெருந்தொற்று தாக்குதலுக்கு மத்தியில் நாம் கல்வியைச் சீர்படுத்தியுள்ளோம். வெளிநாடுகளில் ‘அகாடெமி’ என்று சொல்லக்கூடிய கல்வி திட்டத்தை நாம் அமல்படுத்துவதன் மூலம் கல்வி முறையில் இருந்து வந்த பல சிக்கல்களைக் களைய வழிவகுக்க முடியும். மலிவான, ஆற்றல்மிக்க, மிகவும் சிறிய கல்வி முறையை நாம் செயல்படுத்தும் காலம் வந்துவிட்டது. கோவிட்-19க்கு முன் பல பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்கள் ஒரு பெரிய கடன் சுமையுடன்தான் தங்கள் கல்வியை நிறைவு செய்தனர். இனி வரும் காலங்களில் மாணவர்களின் கடன் சுமையைக் கட்டுப்படுத்தும் கல்வி முறை உருவாக இஃது ஓர் வாய்ப்பாக அமையும் என நாம் நம்பலாம்.

எனவே, மாணவர்களாகிய நீங்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து உங்கள் நேரங்களை வீண்வழியில் செலவிடாமல் உங்களுக்குத் தேவையான கல்வியை எவ்வாறு ஆற்றல்மிக்க வழியில் பெறலாம் என்பதை சிந்தித்து அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். குறைந்த செலவில் கல்வி கற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களும் கல்வியைத் தடையின்றி பெற்றுக் கொள்ள செயலாற்ற வேண்டும்.

இருப்பினும், ஒரு சில மாணவர்கள் கல்வியின் அவசியம் அறியாமல் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதையும் நம்மால் காண முடிகிறது. ஆசிரியர்களின் வழிகாட்டல் இன்றி இவர்களால் சுயமாகக் கல்வி கற்க முடியாமல் போகும் சூழ்நிலையும் உருவாகிறது. இதுபோன்ற மாணவர்களை நெறிபடுத்த பெற்றோர்கள் தங்கள் பங்கினை ஆற்றுவது மிகவும் அவசியம். விளையாட்டுத்தனமாக இருக்கும் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவும் வாசிக்கவும் தூண்ட வேண்டும். இயங்கலை மூலம் பாடம் போதிக்கும் ஆசிரியர்களும் தாங்கள் கொடுக்கின்ற பாடங்களை அனைத்து மாணவர்களும் செய்வதை உறுதிபடுத்த வேண்டும்.

காலம் பொன் போன்றது. கடந்து போன காலம் நீங்கள் எவ்வளவு போராடினாலும் மீண்டும் வராது. காலத்தின் மகிமையை உணர்ந்து மாணவர்கள் இச்சூழ்நிலையை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதே வேளையில், வாசிப்புக்கு முக்கியத்துவம் அளித்து சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசியுங்கள். வாசிப்பு ஒன்றே நம்மை மேன்மைப்படுத்தும் ஆயுதம். அந்த ஆயுதம் உங்கள் கைகளில் இருக்கும் வரை உங்களை எவராலும் வெல்ல முடியாது.

நாலும் தெரிய நாளும் படிப்போம்
வாசிப்பு நமது சுவாசிப்பு

டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்,
ஜெயபக்தி பதிப்பகம்.

7 thoughts on “கல்வி யுத்தம்!

  1. தா.விஜயா says:

    ஆரம்ப பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் இக்கால கட்டத்தில், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் கல்வியில் பெரிதும் அக்கறை கொண்டு ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை முறையாகச் செய்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும். பெற்றோரின் கூடுதல் கவனம் இல்லாவிடில் மாணவர்கள் கல்வியில் பின் தங்கும் சூழல் ஏற்படும்.

  2. நிர்மலா அப்பளசாமி says:

    மாணவர்கள் வீட்டில் இருந்தபடி கல்வி கற்க ஆசிரியர்களுடன் பெற்றோர்களும் இணைந்து செயல்பட்டால் நிச்சயமாக நம் மாணவர்கள் பின்னடைய மாட்டார்கள். மாணவர்கள் சுயக் கட்டுப்பாடுடன் பள்ளியில் இருப்பதாக எண்ணி ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை முறையாகச் செய்வதைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

  3. AISHWARYA D/O TANGARAJA says:

    We must work hard, because it might be little difficult for some students to catch up. Use this opportunity to work on the subject which are difficult for you……. .. And dont be afraid to ask your parents or teachers for help.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *